Sunday, July 14, 2013

பில் கேட்ஸ் Vs கவுண்டமணி

..அந்த இன்னொரு பழம் எங்கேடா..?
..அதாண்ணே இது..!
   - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை.
    எளிமையின் அடையாளம் வாழைப்பழம்.ஏழைமக்கள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக் கூடியது.நல்ல காரியங்கள் அனைத்திலும் தட்டின்மேல் கம்பீரமாய் அமர்ந்திருப்பது இது.உண்பதற்கு இனிய பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும் ; இட்டு உண்ண இலை ; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழுமரம் ; பித்தம் போக்கிட வேர் - என அடிமுதல் நுனிவரை அனைத்துப் பாகங்களையும் மனிதப் பயன்பாட்டுகுத் தருவது வாழை.
    முக்கனிகளில் ஒன்றான இதில் பூவன் , நாடன் , பேயன் ,செவ்வாழை ,கதலி - எனப் பல வகைகள் உண்டு.ஒவ்வொரு வகையிலும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் உண்டெனவும் கருதுகிறார்கள்.
    சங்கத் தமிழ்ப் பாடல்கள் வாழையை, வளமான நிலப்பகுதியின் குறியீடாக அடையாளப்படுத்துகின்றன.மலையும் காடும் வயலும் உள்ள நிலப்பரப்புகள் யாவும் சுவைதரும் வாழையின் வாழிடமாய் இருந்திருக்கின்றன.’மலைவாழை அல்லவோ கல்வி ; அதை வாயாற உண்ணுவாய் போஎன் புதல்வி’ எனக் கல்வியின் மேன்மையைச் சுட்டிப் பாவேந்தர் பாரதிதாசனார் பாடுகிறார்.அறிஞர் அண்ணாவின் ‘செவ்வாழை’சிறுகதை அவரின் எழுத்துலகச் சாதனை எனக் கருதப் படுகிறது.வாழையடிவாழையாக எனும் வாழ்த்துவரிகள் இறப்பிலா வாழ்க்கைத் தொடரியக்கதைக் குறிக்கிறது.
    ஏழைகளுக்க்ப் பசியை ஆற்றித்தரும் ஓர் எளிய உணவு, எப்படிப் அபணக்கர மேன்மக்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியிருகிறது என்பதைப் பார்த்தாக வேண்டும் நாம்.
    பில் கேட்ஸ் - தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற பேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பவர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரி தேர்வு. இந்த இருக்கப்பட்ட மகராசன் ஏன் ஒரு வாழைப்பழப் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்..? காரணம் இருக்கிறது.
    இது மரபுமாற்றப் பயிர்களின் காலம்.’துள்ளும் தக்காளி’துவளும் கத்தரிக்காய்’ எனக் குரலெழுப்பி வந்துகொண்ருக்கின்றன மரபுமாற்ற உணவுப்பயிர்கள்.மான்சாட்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் தமது பயிர்களை ஏழைநாடுகளில் விற்றுத் தம்மை வளர்த்துப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் உணவுப்பயிர்களின்மீது தமது ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் கிட்டத்தட்டத் தம்மைக் கடவுளாகவே கருதிக் கொள்கின்றன.
          உயிர்களை  உருவாக்குகிறோம்..
         உணவை உருவாக்குகிறோம்..
         ஊட்டத்தை உருவாக்குகிறோம்..
             - என்ற முழக்கத்தை இவை முன்வைக்கின்றன.
     வானம்பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் ஊட்டம் தந்துகொண்டிருந்த புன்செய்ப்பயிர்களை இப்போது தேடித்தான் காணவேண்டியிருக்கிறது.இயற்கைவழி விளைவித்த உணவுப்பொருள்கல் விற்கும் கடைகளை ஒரு நகரத்திற்கு ஒன்றிரண்டு எனும் விகிதத்தில் மட்டுமே காண முடிகிறது.கம்பங்கூழ் அருந்திப் பழக்கப்படாத வீடுகளில் எல்லாம் தவறாமல் ஆர்லிக்ஸ் புட்டிகள் இருக்கின்றன.சோளம்,ராகி,வரகு,சாமையை மறந்துவிட்டுக் காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் தமிழ்மக்கள்.
    விதைத்தானியமே எடுத்துவைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள்.ஒரு விவசாயி தனது அடுத்த விதைப்புக்கு அவர்களையே நாடிக் கையேந்தி நிற்க வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், அய்யா பில்கேட்ஸ் அவர்களின் அண்மைய முயற்சியொன்று இந்திய உழவனைத் திடுக்கிட வைத்திருக்கிறது.ஆஸ்திரேலியப் பயிர் விஞ்ஞானி ஜேம்ஸ் டேல் என்பாருடன் சேர்ந்து அவர் புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
   ‘வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல ; மருந்தும்கூட-’ என்பதே அது.இந்தக்’கண்டுபிடிப்பின்’ பயனாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்க உகாண்டா நாடுகளில் பிறப்பு மரணங்களைத் தடுக்க முடியுமாம்.மேலும்,பிள்ளைபெறும் தாய்மார்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்தச்சோகை நோயைத் தவிர்க்கவும் முடியுமாம்.தாம் கணடுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவக் குணங்களைப் பொதித்து வைத்திருப்பதாக மார்தட்டுகிறார் அவர்.
   ‘மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ,அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது.நமதுவாழைச் செல்வத்தைமுழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பயிர் விஞ்ஞானியும் சூழலியப்போராளியுமான டாக்டர். வந்தனா சிவா.மான்சாண்டோவின் உணவுப்பயிர் இருப்பில் 5 இலட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
    நமது வளமார்ந்த உயிர்ப்பனமயச் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி,நுகர்வின் மீது தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவங்களின் அந்தரங்கத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்..
    ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும்,மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்.எனவேபணம்படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த ஆதிக்கப்போரைத் தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் நாம்.   
       
   

1 comment:

  1. நமது பாரம்பரிய உணவுகளை மீண்டும் கைக்கொள்ளுவோம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்ப்போம்!

    ReplyDelete